Tuesday, July 15, 2014

அர்ஜுனனும் அஸ்வத்தாமனும்

ஓம் ஸ்ரீமுருகன் துணை

அன்புள்ள திரு.ஜெ வணக்கம்

அர்ஜுனன்மீது அஸ்வத்தாமனுக்கும், அஸ்வத்தாமன்மீது அர்ஜுனனுக்கும் பொறாமை ஏற்படுவது மானிட இயல்பு. அதுவும் கல்விக்கற்கும் குழந்தைகள் மனதில் எழும் எண்ண ஆடல்கள். அழகான சித்திரம் நேற்றும் இன்றும்.

அஸ்வத்தாமன் அஸ்தினாபுரம்  வந்தபின்பு துரோணருக்கும் தனக்கும் இடையில் ஏற்படும் இடைவெளியை அறியும் அர்ஜுனன் உள்ளுக்குள் அறிந்து வெம்புகின்றான் அது பொறாமை, பாசம், பக்தி எல்லாம் கலந்த ஒரு கலவை. மேலும் குருவானர் தந்தையின் இடத்தை பிடித்துக்கொண்டு அதற்கும் மேலான ஒரு தளத்தில் சீடனின் இதயத்தில் வாழ்கின்றார். அந்த இடம் தரும் கனத்தை அகம் அறிந்து தவிக்கின்றது என்று உங்கள் எழுத்தால் இப்போது அறிகின்றேன். இந்த தவிப்பு நல்ல மாணவர்கள் எல்லோர் மனதிலும் ஏதோ ஒரு நொடியில் நடந்திருக்கும் கால நடனம்தான்.

தெய்வத்திற்கும் பக்தனுக்கும் இடையில் உள்ள நந்திப்போல அஸ்வத்தாமன் அர்ஜுனனுக்கு அமைகின்றான்.
தெய்வத்திற்கும் நந்திக்கும் இடையில் ஒருபோதும் தெய்வம் இல்லை. அதுபோலவே அஸ்வத்தாமனுக்கும் துரோணருக்கும் இடையில் அர்ஜுனன் இல்லை.

தெய்வத்தின் பார்வையில்  இந்த தடுப்பைகள் எதுவும் இல்லை.  தெய்வத்திற்கு நந்தி, பக்தன் இருவரின் இடமும் இரண்டின் குணமும், இரண்டின்மீது தான் கொண்ட அருளும் தெய்வம் அறிந்ததே.

நந்தி ஒரு கணத்தில் அறிகின்றது பக்தனுக்காக இறைவன் தன்னை அழைக்காமல் மால் அயன் அறியா பாதம் மண்ணில்பட  திருவாரூர் மண்ணில் நடப்பான் என்பதையும், தலைபிரசவம் பார்க்க தாயுமாவன் என்பதையும்.பக்தன் ஒரு கணத்தில் அறிகின்றான் தனது கண்கள் நீர்வடிய நிற்கும்போதே இறைவன் நந்தியில் எறி வான்வழி செல்கின்றான் என்பதையும்.

நந்திக்கும் பக்தனுக்கும் இடையில்தான் இந்தப்போராட்டம். இந்த போராட்டத்தை அகம் அசைக்கும் உணர்வுகாலால் வடித்து உள்ளீர்கள்.
கல்விக்கற்கும் குழந்தைகளின் வாழ்வில் நடக்கும் நெஞம் நெகிழ்விக்கும் போராட்டம் தான் இது. இது ஒரு யுத்தத்திற்கு சமமானதுதான். இந்த யுத்தத்தில் குருவின் மகன் குருவை வெறுத்து பகையாகிக்கூட செல்வது கண்கூடு. சரியான தாய் அமையவில்லை என்றால் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் விழும் விரிசல் பூமிப்பிளவாக ஆகிவிட வாய்ப்பு உள்ளது. இவை உங்கள் எழுத்தில் எழுந்து வருவதை காண்கின்றேன்.
அசுவத்தாமன் துரோணரை விலக்காமல் அர்ஜுனன்மீது தீராபகைமைக்கொள்வது சரியான பாத்திரப்படைப்பு, தாய்மீதும் தந்தைமீதும் அவன் கொண்ட பாசம் அத்தனை.  அவன் அகம் வழியாக கதை அதன் இலக்கை நோக்கிச்செல்கின்றது. எந்த காரணம் கொண்டும் அவன் அர்ஜுனன் இருக்கும் படையில் இனி இருக்கமாட்டான். அவன் அம்பரா துணியில் அர்ஜுனனுக்கு எதிராக ஒரு அம்பை வைத்து காத்து பூஜிப்பான் என்பதும் தெளிவாகின்றது.

என் கேள்வி இதுதான். இத்தனைபெரிய உயிர்க்கொலைப்பகை அர்ஜுனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் இப்போதே தேவையா? இப்பொழுதுதானே அவர்கள் யானையிலேயே ஏறி இருக்கிறார்கள். இன்னும் அர்ஜுனன் குதரை ஏற்றம்கூட நடத்தவில்லை. அவர்கள் இருவரும் யானையாகவும், குதிரையாகவும் ஆகும் காலம் இன்னும் இருக்கல்லவா?

குருவின் ஒவ்வொரு பாத அடியிலும் விழிந்து பணிந்து தொழுதுச்செல்லும் அர்ஜுனன் மண்ணகம் காணாத அற்புத சீடன் இத்தனை சீக்கிரத்தில் கோபம் கொண்டு இந்த யுத்தம் செய்தது, கொலை அளவு  முடிவு எடுத்தது அவன் பாத்திரத்தை கீழே தள்ளுக்கின்றது.

  
நன்றி
வாழ்க வளமுடன்.