Monday, April 20, 2015

வெண்முரசின் தரிசனம் 2

 




முதற்கனலின் தரிசனம் என்பது ஜெ சொல்வதைப் போல் பின்வரும் குறளே.

"அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை
"

அஸ்தினபுரி என்னும் காட்டின் பேரழிவுக்குக் காரணமான காட்டுத்தீயின் முதல் கனல் யார் என்ற விவாதமே அந்நாவல். நீங்கள் கொடுத்த உவமையின் வழியில் சொல்வதானால், வலியதை பலவீனமாக்குவது எது என்பதே அந்நாவல் முன்வைக்கும் தரிசனம். அம்பையின் கண்ணீர் மட்டுமல்ல, பிரதீபரின் மனைவியான சுனந்தையின் கண்ணீர் கூடத்தான். துயரத்தோடு, ஆற்ற வழியில்லாமல் அழுத கண்ணீர். அக்குறளின் சிறப்பே அதில் உள்ள "தேய்க்கும்" என்ற வார்த்தை தான். அந்த கண்ணீர் செல்வத்தை உடனடியாக அழிக்காது. தேய்க்கும். மெது மெதுவாக அழிகிறது என்பதே தெரியாத வகையில் அழிக்கும். இதோ இன்று பாண்டவர்களும், கௌரவர்களும் நாட்டை பங்கிடுகிறார்களே அது தான் பெருயுத்தமாகப் போகிறது என்று பீஷ்மருக்குத் தெரிந்திருந்தால் அவர் அதற்கு ஒப்பியிருப்பாரா? அம்பையின் கண்ணீர் தேய்க்கிறது. அவர் கண்ணெதிரேயே அவர் எதற்காக அவளை ஆற்றவொண்ணாத கண்ணீரைச் சிந்த வைத்தாரோ அது தேய்கிறது. 

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்.