Monday, April 20, 2015

கிருஷ்ணையின் கைகள்

 
 
 
அவள் கைகளை மீண்டும் பார்த்த சாத்யகி உள அதிர்வுடன் விழிவிலக்கினான். அவை இளைய யாதவரின் கைகள். மேல் கை நீலம். உள்ளங்கை செந்தாமரை. 

அவள் புன்னகையை நோக்கியபோது மீண்டும் அவன் சொல்மறந்தான். விழிகளை விலக்கியபடி “எனக்கு ஒன்றும் தெரியவில்லை. நான் ஆணைகளின்படி நடப்பவன் மட்டும்தான்” என்றான்.

திரௌபதி கண்களில் மெல்லிய ஒளி ஒன்று எழுந்தது. “முறைமைச்செய்தி எனக்கு வந்ததுதான். அவர்களுக்குத்தான் உண்மையான செய்தி இருக்கும்” என்றபின் நகைத்து “செய்தியை அறிந்துகொள்ளும் பறவையை எவரும் அனுப்புவதில்லை யாதவரே” என்றாள். சாத்யகி அதற்கும் என்ன சொல்வதென்று தெரியாமல் புன்னகைசெய்தான். “உங்கள் புன்னகை அழகாக இருக்கிறது” என்ற திரௌபதி


கிருஷ்ணனைக் காண்கின்ற பொழுதெல்லாம் சாத்யகி எவ்வாறெல்லாம் பரவசமடைகிறானோ, அதுபோன்ற பரவசத்தை கிருஷ்னையைக் கண்டபோதும் அடைகிறான்.  அதனோடு சேர்த்து அவளுடைய ஆளுமையும், அடுத்த ஆண்மகனைக் கண்டு, புன்னகை அழகாக இருக்கிறது என்று சொல்லக்கூடிய கள்ளமற்ற இயல்புநிலையும் அவனைச் சுழலில் அகப்பட்ட சூழலில் திணற அடிக்கின்றன.  செய்தியை அறிந்துகொள்ளாத பறவையின் தன்மையைப் பெற்றதனால் மட்டுமே அவன் பெரிய ஆளுமைகளின் கைக்குழந்தையாக விளங்குகிறான் போலும்.

கணபதி கண்ணன்