Wednesday, July 22, 2015

வழிகள்-2

அன்புள்ள சுரேஷ் வெ,

உங்கள்  கேள்விகளுக்கு வெண்முரசு இதுவரை தந்திருக்கும் விவரங்களில் இருந்து பதில்  தேட(ற) முயல்கிறேன். தகவல்களை வெண்முரசுக்கு வெளியில் தேடத் துவங்கினால் அது முடிவில்லாமல் செல்லும் என்பதும், அது நமது வாசிப்பனுபவத்தை மட்டுறுத்தும் என்பதும் என் எண்ணம்.

1. திருஷ்டதுய்மனின் பாதை : அஸ்தினபுரியில் இருந்து யமுனையைக் கடந்து சப்த சிந்துவின் ஏதேனும் ஒரு கிளையில்  பயணத்தைத் துவக்கியிருப்பார். என்னுடைய அனுமானம் சுதுத்ரி. அதிலிருந்து சிந்துவில் நுழைந்து அப்படியே கடல் வழியாக துவாரகையை அடைந்திருப்பார். உண்மையில் அஸ்தினபுரியில் இருந்து துவாரகை வர எளிதான வழி இதுவே. பாலையை முற்றிலுமாக தவிர்த்து விடலாம்.

2. பிரயாகையில் மகதப் படைகளுடன் போர் தவிர்த்தமை: முதலில் சாத்யகி உட்பட நால்வரும் கிருஷ்ணபுவசுக்கு சென்றது வணிகப் படகு என்ற போர்வையில். எனவே போர் நடைபெறவே இல்லை. கிருஷ்ணன் அவர்களைச் சந்தித்த போதும், அதன் பிறகான போரின் போதும் கிருஷ்ணனுடன் முழு படை ஒன்று இருக்கிறது. அதில் அஸ்தினபுரியின் படைவீரர்களும், பார்த்தனும் கூட இருக்கின்றனர். இப்படையை எதிர்த்து மகதம் வந்திருக்குமானால் அது அஸ்தினபுரிக்கு எதிரான போராகவே கருதப்பட்டிருக்கும்.

 இரண்டாவது, மகதத்தின் அனைத்து காவலரண்களுக்குமாக பதினெட்டு யாதவ படைப் பிரிவுகள் செலுத்தப்பட்டு நிலை கொள்ள வைக்கப்பட்டு விட்டன. மகதத்தின் படை அவற்றை எதிர்கொள்வதற்காக பிரிந்து நின்று கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தான் கங்கையில் எவ்விதத் தடையுமின்றி கிருஷ்ணன் பவனி வந்து கொண்டிருக்கிறான்.

மூன்றாவது, மகதம் தற்போது உள்ள நிலையில் ஒரு முழுப் போருக்குத்  தயாராக இல்லை. இது முன்பே (வெண்முகில் நகரத்தில்) குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதையே வசுதேவரின் அரசவைக்கு வரும் மூன்று மகதத் தூதர்கள் உறுதிப்படுத்துகிறார்கள். இச்சூழ்நிலைகளால் தான் கிருஷ்ணனுக்கு காசியில் முழு அரச வரவேற்பு கொடுக்கப்படுகிறது. அதையே, காசியில் போரில்லாமல் அரச சூழ்கையாலேயே வேண்டியதைப் பெற முடியும் என்று கிருஷ்ணன் கூறுகிறான். இவற்றால் தான் மகதத்துடன் போர் தடுக்கப்படுகிறது.

3. திருஷ்டதுய்மன் படையுடன் திரும்பும் பாதை: இப்பகுதியில் கங்கையும், யமுனையும் சற்றே இடம் மாறி வந்துள்ளது போல் தான் தெரிகிறது. கிருதவர்மன் இவர்கள் கையில் மாட்டுவது கங்கைக் கரையில், வாரணவதத்திற்கும் வடக்கே இருக்கும் சுதமவனத்தில். அங்கிருந்து கங்கை வழியாக வந்து, யமுனையில் திரும்பி பின் சர்மாவதிக்குள் நுழைந்து உஜ்ஜயினிக்கு வருகிறார்கள். இது யமுனையில் இருந்து கங்கை வழியாக என்று எழுதப்பட்டுள்ளது. இது மாற்றப்பட வேண்டியதே. மேலும் இவ்வழியில் மதுரா வருவதே இல்லை. மற்றுமொரு குறிப்பு - முன்பு இதே வழியில் தான் பாமாவும் துவாரகை வருகிறாள். ஆக, இரு வழிகள் தான்!!!


அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்