Monday, August 24, 2015

கானகவேங்கையின் தின்பண்டம்.

 
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பார்கள், குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் இருப்பதற்கு காரணம் அவர்களின் குணமும், கண்களும் ஒன்றாக இருப்பதுதான். 

சுபத்திரை குழந்தைதானா? அவள் பெண்வடிவில் ஒரு பலராமன்,இருகால் கொண்ட பெண்பிடி, சகோதரன் கைபிடித்து நடக்கும் துர்க்கை. அலையாழி அரிதுயிலும் மயனது தங்கையே என்று அபிராமிப்பட்டர் சொல்லும் சொல்லுக்கு உரியவள். வசுதேவர் கனவில்கூட அவளை குழந்தை என்று நினைக்கமுடியாதபடிக்கு இருக்கின்ற அன்னை அவள். காலால் குதிரை ஓட்டுவாள், இருகையாள் வாள் சுழற்றுவாள், எதிரியின் உடல் மட்டும் இல்லை எதிரியை தாங்கும் பூமிகூட அவள் கதையின் அடியின் வலி அறியும். 

பெற்றத்தந்தைக்கு பிடியென,தாயென, சக்தியென தெரியும் சுபத்திரை கண்ணனுக்கு மட்டும் தன் மகளெனவே தெரிகின்றாள். மகளென தெரியும் ரோகிணிக்கும், தேவகிக்கும்கூட அவள் பேச்சு புரிவதில்லை. தங்கையென தெரியும் பலராமனுக்கு அவள் மனமும் கண்ணும் புரியவில்லை. கண்ணன் அவள் கண்ணில் காலத்தைப்பார்க்கிறான், காலவடிவமாகவே இருக்கும் நீலனின் வெள்ளை நிழல் என்று நினைக்கிறான். நிழல் பொருளை தொடாமல் இருக்க முடிவதில்லை என்பதுபோல் அவனை அவளும் தொடமல் இருப்பதில்லை. 

குழந்தைவடிவில் ஒரு அரியாசனி என்று வளர்ந்து வரும் சுபத்திரை, துவாரகைக்கு வரும்நாளில் தன்னை ஐம்புலன்களாலும் தின்பண்டம் திங்கும் குழந்தை என நமை கண்டு களிகொள்ள வைக்கிறாள். 

துவாரகைக்கு முதன்முதலில் வரும் சுபத்திரை அந்த நகரத்திரன் தோரணவாயிலுக்குள் உடலலோடு நுழையமுடியாது, நிழலாகத்தான் நுழையமுடியும் என்ற இடத்தில் அதை வைகுண்டம் என்று ஆக்கிச்செல்கிறாள். அது பலராமன் அறியத ஒன்று. பருப்பொருளில் இருக்கும் நுண்பொருள் காணும் கண்கொண்டு நிற்கின்றாள். இல்லாததைச்சொல்வதுபோல உள்ளதை உள்ளப்படி சொல்லும் குழந்தையின் கண்கள் அவை. 

துவாரைகை மாளிகையை அவள் முதலில் உப்பென்று எண்ணுகின்றாள். ஏன் இதனை உப்பொன்று என்னவேண்டும்? அது அழிந்துவிடும் என்பதால் மட்டும் உப்பென்றாளா? வெண்மையாக இருக்கும் ஒன்றை உப்பென்று, உப்பென்றதாலேயே காலமழையால் அது கரைந்துவிடும் என்றாளா? இல்லை, நீலன் கடலென்றாள் , உப்பு லட்சுமி. நீலன் இருக்கும்வரை துவாரகை இருக்கும், துவாரகை கரைந்து இல்லாமல் போகும், நீலனும் கரைந்துபோவான் ஆனால் கண்ணனும், துவாரகையும் நாவில் சுவையாக இருப்பார்கள். சுபத்திரை துவாரகை காணமல் போகும் என்று அஞ்சுகிறாளா? கண்ணன் காணமல் போவன் என்று அஞ்சுகிறாளா? துவாரகை வழியாக அவள் தன் அண்ணனாகிய கண்ணன் இல்லாமல் ஆகுவானே என்று அஞ்சுகிறாள். இது குழந்தையின் குணம்.  மானிட மனம் விசித்திரமானது, இறவாதவனை, இறப்பான் என்று அஞ்சுகிறது. என்றும் இல்லாமல் இல்லாதவனை இல்லாமல் ஆவான் என்று அஞ்சுகிறது. தன்னை இறவாதவன், என்றும் நிலையானவன் என்று எண்ணுகிறது. இதுதான் பேதை மனம். குழந்தையும் பேதையும் ஒன்று, இரண்டும் சொல்வது புரிவதில்லை ஆனால் உண்மையைதவிர அவைகள் வேறு ஒன்றும் சொல்வதில்லை.  

கண்ணால் பார்க்கும் ஒரு மாளிகையை வாயால் சுவைக்கும் அந்த சிறுகுழவியின் சுவை அழகை என்ன என்பது? நாம் அழகிய ஒன்றை கண்டு அதிசயத்து வாய்பிளக்கும் தருணத்தில் கண்ணால் விழுங்குகின்றோம் என்போம். கண்ணால் விழுங்கும் ஒன்றின் அழகை அறிய முடியும், சுவை அறிய முடியுமா? சுபத்திரை அதன் சுவை அறிகின்றாள். அவள் நாவில் எச்சில் ஊறவைக்கும் அந்த நகரம் உப்பென்று இனித்து, கறித்து, காலமாகிய மழையில் உப்பென கரையும் என்கிறாள். உப்பென கரையும் என்றவள் பின்பு கற்பூரம் என மணக்கும் என்கிறாள். கண்ணால் உண்ட ஒரு அழகிய நகரம் உப்பென சுவையாகி, கற்பூரம் என மணத்து இன்னும் காலத்தின் காற்றில் மிதந்துக்கொண்டுதான் இருக்கிறது. இனியும் இருக்கும். துவாரகை என்றால் நாவில் நீருறும், நாசியில் மணக்கும் ஒரு அழகிய திண்பண்டம் என உருவாகிய நகரமது. குழந்தைக்கே உரிய மனநிலையில் அவள் அதைக்காண்பதும். அழகும், சுவையும் மணமும் நிறம்பிய தின்படம்  என இருப்பதாலேயே அது அழியும் என்ற அவள் உள்ளத்தவிப்பும் எண்ணும்தோறும்  இனிக்கிறது. துவாரகையை அழகிய தெய்வீக நகரம் என்றுதான் இதுவரை சொன்னார்கள். அது அழகிய, தெய்வீக தின்பண்டம் என்று சுபத்திரைக்காட்டுவது அழகு. கண்ணன்கூட ஒரு தெய்வீக தின்பண்டம்தான் எத்தனை காலமாய்  எல்லொரும் அவனை  தின்றுக்கொண்டு இருக்கிறார்கள். சுவையாய் மணமாய் இருந்துக்கொண்டுதான் இருக்கிறான். அவன் இருக்கும் துவாரைக்கூட ஒரு தின்பண்டம்தான் என்று கடவுளுக்கு தங்கையான அந்த வெள்ளைசிறுபுள் எண்ணுவது எத்தனை அழகு.

சுபத்திரை குழந்தையாகும்தோறும் துவாரகை தின்பண்டம் என ஆகின்றது. துவாரகை தின்பண்டம் என ஆகும்தோறும் துபத்திரை குழந்தை என ஆகின்றாள். சுபத்திரை என்னும் மாபெரும் சிற்பத்தை கையின் பொம்மையென காட்டும் இந்த காட்சிகள் அற்புதம். 

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ
உலகம் அறிந்திடாத புதுமையம்மா நீ
பார்வையிலே குமரியம்மா 
பழக்கத்திலே குழந்தையம்மா என்னும் கண்ணதாசன் வரிகள் உயிர்பெற்று வந்து கண்முன்னே சிற்கிறது சுபத்திரை என்று. 

வசுதேவர் சுபத்திரையை எண்ணி அஞ்சுவதில்லை, அவளை யானை என, துர்க்கை என எண்ணி அவளை தன்னம்தனியாக உலவ விடுகிறார்.  நிலவெழுந்த இரவில் யமுனையில் படகோட்டிவரும் போதும் அஞ்சவில்லை. அவளுக்காக தவிக்கவில்லை. ஆனால் அவள் வீராங்கணை என்பதை அறிந்து இருந்தும், ஓடும் குதிரையின் ஓட்டத்தை நிறுத்தாமல் தவி தனது ரதம் ஏறும் அணங்கென்று அறிந்தும் கண்ணன் அவள் துயில் எழுந்து விழிக்கும் முன் அவள் கண்களுக்கு தன்னை தரிசனமாக்கும் இடத்தில் அவளை சிறு குழந்தையெனவே வைக்கிறான். வசுதேவர், வாசுதேவன் இந்த இரண்டு கண்கள் வழியாக சுபத்திரையைப்பார்க்கும்போதுதான் ஜெ சொன்ன இந்த உவமை எத்தனை அழகென்று விளங்குகின்றாது.

கற்பாறையென அடிமரம் பருத்த கானகவேங்கையில் எழும் மலரின் இதழ் எத்தனை மென்மையானதுதேன் எத்துணை இனியது?-இந்திரநீலம்-82

சுபத்திரை என்னும் கானகவேங்கையின் அடிமரத்தை வசுதேவர்ப் பார்க்கிறார். வாசுதேவனாகிய கண்ணன் அதன் மலர் இதழ்களை, அதன் சுவைத்தேனைப்பார்கிறான்.

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.