Wednesday, June 29, 2016

கிருஷ்ண ரகசியம்




உங்களுடைய மகாபாரத நாவல் வரிசையை தொடர்ந்து வாசித்து வருகின்றேன். மகாபாரதத்தில் ஒரு நிகழ்ச்சி இப்படி நடந்தது என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் விசயங்களை எதார்த்தமாக எப்படி நடந்திருக்கும் என்று அதை மாற்றி எழுதிவிட்டு சூதர்கள் அதை எப்படி பாடினார்கள் என்பதன்மூலம் ஏற்கனவே அந்த விசயம் மற்றவர்களால் எப்படி சொல்லப்பட்டு வருகிறதோ அதையும் இணைத்திருப்பதை வாசிக்கையில் புதியவிதமானதொரு அனுபவம் ஏற்படுகிறது. குறிப்பாக கிருஷ்ணனைப் பற்றிய காலம் காலமாக கேட்டு வரும் அற்புத விசயங்களை (மலையை தூக்கினார்.... பாஞ்சாலிக்கு முடிவற்ற சேலையை கொடுத்து மானம் காத்தார்) போன்ற விசயங்களையும் அதே விதத்தில் எழுதியிருப்பதன் மூலம் கிருஷ்ணனை கடவுள் என்ற கோணத்தில் அனுகாமல் அவர் ஒரு மன்னன் என்ற கோணத்தில் எழுதுகின்றீர்களா என்று தெரிந்துகொள்ள விரும்புகின்றேன். பாஞ்சாலியின் துகில் உரியும் காட்சியை படிக்கும்போது அற்புதமானதொரு அனுபமாக இருந்தது. கிருஷ்ணனின் பெயரை சொல்லிக்கொண்டு அதே சமயத்தில் அற்புதத்தால் அல்லாமல் எதார்த்தமானதொரு முறையில் அவளுக்கு உடை கிடைத்துக்கொண்டே இருந்தது புதியவிதமாக இருந்தது. இருந்தாலும் ஏன் அது கிருஷ்ணனின் அற்புதமாக எழுதவில்லை என்று யோசிக்கும் போது அவரை நீங்கள் எப்படி அனுகுகின்றீர்கள் என்று தெரிந்துகொள்ள ஆவல் ஏற்பட்டது.     

நன்றி

பூபதி


அன்புள்ள பூபதி

கிருஷ்ணன் பாரதத்தின் மிகப்பெரிய மர்மம் என்று நடராஜ குரு சொல்வார். மர்மம் என்றால் மறைஞானம் சார்ந்த மர்மம். esoteric phenomenon. பக்தர்களின் ஒற்றைப்படையான ‘கடவுள்’ அல்ல. அரசன், ஞானி, காதலன், புரட்சியாளன், புதுயுகசிற்பி, ஆம் தெய்வமும் கூட.

எல்லா கோணத்திலும் ஒரேசமயம் கிருஷ்ணனைச் சொல்லும் முயற்சி வெண்முரசு.

ஜெ