Tuesday, September 27, 2016

தருமனும் மாந்தாதாவும்



இனிய ஜெயம்,

நண்பரின்  மாந்தாதா தலைப்பிட்ட கடிதம் வாசித்தேன்.  உண்மையில் ஒரு எல்லைக்கு மேல், தர்மன் அடைந்த நிலை மிக மிக மர்மம் கொண்டே விரிகிறது.  அது ஏன் அர்ஜுனனோ நகுல சகாதேவனோ கேட்காத வினாவை, நீங்கள் அடைந்தது என்ன என்ற அடிப்படை வினாவை  மந்தன் கேட்கிறான்?  ஓநாயின் வயிற்றில் வாழும் ஜடரையை திருப்தி செய்த ஒருவனின் கதை நாவலுக்குள் சில வரிகளில் வருகிறது.  மந்தனும் விருகோதரன். அவன் உதரத்திலும் ஜடரைதான் வாழ்கிறாள்.  இனி இது அமுதம் நிறைந்த  அன்னம் குறையாக் கலம் என்று  தர்மன் மந்தன் வசம் சொன்னால்தான்  மிகப்பெரிய கவித்துவ எழுச்சி கிடைக்கிறது.

மேலும் திரௌபதி  நெருப்பிலிருந்து ஜனித்தவள். திரௌபதியை அறிய  கந்தமாதனம் அன்றி தர்மனுக்கு வேறு வழி உண்டா என்ன?  தாயுமானவன் ஆகி என்னை உண் என்றவனும், வரும் தலைமுறை குழந்தைகளுக்காக தன்னையே ஆகுதி செய்யும் சுப்ர கெளசிகரும் ஒரே நிறை.  மாளவம் எனும் சிறிய எல்லைக்குள், அதன் நன்மைக்கு தன்னைத் தரும் கெளசிகரை விட நூறு நூறு மடங்கு உயர்கிறார், ஜடரைக்கு என்னை உண் என்று சொல்லி தன்னையே அளிக்கும் தர்மன்.  

சீனு கடலூர்