Wednesday, April 19, 2017

யயாதியும்,தேவயானியும்






அன்பின் ஜெ,
         
இந்தாட்களில் மாமலர் என்னை முழுமையாக நிறைத்திருக்கிறது என்றே உணர்கிறேன்.காவியத்தின் போக்கா அதன் மொழியா மாந்தர்களா ,எதுவென பிரித்தறிய இயலா பித்து என்றே கூறலாம்.நீலம் வாசித்த நாட்களில் நான் இப்படி இருந்ததுண்டு.
  
யயாதியும்,தேவயானியும் சர்மிஷ்டையும்,சாயையும் என்னுடனே உள்ளனர்.இன்றைய பகுதி யயாதி தன் உள்ளத்தை பார்க்கவனுக்கு தொகுத்து கூறி தான் அதனை உணரும் ஒவ்வொரு வரியையும் மீண்டும் மீண்டும் வாசித்தேன்.முதல்முறை அவளை ஆலயத்தில் சுடரொளியில் பார்த்துவிட்டு மீண்ட அந்நாளை நினைவுறுகிறேன்.
"மண்ணகல் சுடரால் அழகுகொள்வதுபோல அவள் தன் விழிகளால் எழிலுற்றிருந்தாள்."
  
மண்ணகலில் சுடரும் தீபம் போல் சுடரும் அவள் விழிகளிலிருந்த மீளாமல் தனித்திருக்கும் இரவு அற்புதமானது.
 
 "அந்த விடியலைப்போல் பிறிதொன்று எனக்கு அதன்பிறகு வாய்த்ததில்லை. முதல்பறவைக் குரலெழுந்தபோது இருளுக்குள் ஓர் ஒளிக்கீற்று கீறிச்சென்றதுபோல அதை கண்களால் கண்டேன்
   "பொற்கதிர்கள் இலைகள் நடுவே தோன்றி நீண்டு பரவியபோது நான் உருகிக்கொண்டிருந்தேன்."
  
 "எப்போதுமே அது ஓர் வண்ண அசைவுதான். உடைவண்ணம், உடல்வண்ணம். முதற்கணம் அவள் எளிய பெண். பின் நுரைபெருகியெழும் உள்ளம் அவளை அள்ளி அள்ளி நிரப்பிக்கொள்ளும்."
  
எத்தனை சிறந்த வரிகள் .இதனை வாசிக்கும் கணத்தில் அந்த பித்து கொண்டலைந்த என் காலங்களும் மனதில் திரும்புகின்றன.உள்ளுணர்வில் மறைந்திருந்த ஏதோ ஒன்று விழித்து அதனை நினைவூட்டுகிறது.நிலையழிந்த மனத்துடன் உலகின் அழகியல் அனைத்தையும் உள்ளுள் கொண்டு ததும்பிய இனிய நினைவாகவும்,உள்ளத்தை அறுக்கும் கொடூர உணர்வாகவும் ஒருங்கே தோன்றும் அந்த மாயையினைக் கடந்தவர்க்கு மாமலர் நிச்சயம் நெருக்கமாகிவிடும்.
ஒவ்வொரு வார்த்தையும் என்னுடன் இருக்கிறது.இன்றைய பகுதி மட்டுமல்ல தேவயானியின் பிறப்பு முதல்,எல்லா பகுதியுமே நான் வியந்து வாசித்து வருகிறேன்.
 
மாமலரில் வரும் இயற்கையும்,மலர்களும்,நிலங்களும்.காடுகளும்  அது எனக்கு இன்னும் அடுக்கமாகத் தோன்ற வைக்கிறது.ஒவ்வொரு நாளும் இத்தனை உவமைகளுடன்,நுண்ணிய தகவங்களுடன் நீங்கள் எப்படித் தான் எழுதுகிறீர்களோ என்று வியக்கிறேன்.மாமலர் மிக உயரிய மொழி நடையினைக் கொண்டிருப்பதே மீண்டும் மீண்டும் வாசிக்க வைக்கிறது.
      
மிக அற்புதமான இப்பகுதியினை படைத்த உங்களுக்கு நன்றி.
மோனிகா மாறன்.