Tuesday, June 27, 2017

ஆரியவர்த்தம் 2

 
 
அன்புள்ள மது,

நீர்க்கோலம் மட்டுமல்ல, வெண்முரசு முழுவதுமே ஆரியவர்த்தம் என்ற பெயர் வந்துள்ளது. (மழைப்பாடல், பிரயாகை). இந்த ஆரிய வர்த்தத்துக்கும் ஆரியர்களுக்கும் தொடர்பு கிடையாது, பெயரைத் தவிர. ஆரியவர்த்தம் எனப்படும் நிலம் கங்கை சமவெளியில் அமைந்த நாடுகளைக் குறிக்க பொதுவாகப் பயன்பட்ட சொல். அக்கால பாரத வர்ஷத்தில் பெரு அரசுகள் உருவாகாத் துவங்கிய நிலம் இது. பிற பகுதிகளாக சப்தசிந்து, மலை நாடுகள் (பால்ஹிகக் கூட்டமைப்பு), விதர்ப்ப, நிஷாத நாடுகள் மற்றும் தென்திருவிட நிலங்கள் இருந்தன. 

பொதுவாக ஆரியன் என்ற சொல் மேம்பட்டவன், மேன்மையானவன் என்ற பொருளில் பயன்படுத்தப் படுவது. 'பாசமென்னும் பற்றறுத்து பாரிக்கும் ஆரியனே' என திருவாசகம் சிவனைச் சொல்கிறது. 

இப்போது மீண்டும் தலையெடுக்கும் ஆரிய வாதம் ஒரு வகையில் அச்சம் அளிப்பது. ஆரிய வாதம் உச்சத்தில் இருந்த தருணம் இனத்தூய்மை, இனமேன்மை பேசிய தருணங்களாகவே இருந்துள்ளன. இப்போது வலது சாரி கருத்துக்கள் அதிகமாகப் புழங்கும் இக்காலகட்டத்தில் இது மீண்டும் கிளம்புவது சரியாகப் படவில்லை.

அன்புடன், அருணாச்சலம் மகராஜன்