Sunday, June 4, 2017

வெண்முரசுச் சிகரம்

 
 
அன்புள்ள எழுத்தாளருக்கு...

வசுதையிடம் கொஞ்சிப் பேசும் கண்ணனைக் கண்டு, 'உடனே அங்கிருந்து ஓடி விட வேண்டும்' என்று எண்ணும் சாத்யகியை, ஓரிடத்தில் பூரிசிரவஸை, 'புறப்பாடு 2 ஜோதி'யில் அருளப்பசாமி நடத்தும் சென்னைத்தொலைக்காட்சி நகைச்சுவையைக் கண்டு ஓடிவிடலாம் போலிருந்த உங்களில் காண முடிந்தது.

உள்ளே எரிந்து கொண்டிருக்கும் திரெளபதியிடம் 'அரசியலில் மகிழ்கையில் அரசியென்றும் வீழ்கையில் பெண்ணென்றும் வகை கொள்கிறீர்கள்’ என்று நினைவுறுத்தும் கண்ணனை, 'நீங்கள் அரசியல் களத்தில் நுழைந்து விட்டீர்கள் என்றால் அரசியல்ரீதியாகவே கையாளப்படுவீர்கள்' என்ற (79715) உங்களில் காண முடிந்தது.

சைதன்யாவுக்குத் தெரிந்த 3 என்ற பெரிய எண்ணே, நகுலக் குழந்தைக்கும் தெரிகின்றது.

தொடர்பின்றி ஏதோ ஒரு கட்டுரையைப் படிக்கையில் பழையதோ, புதியதோ வெண்முரசுவில் அறிந்த ஒன்று அங்கேயும் கிடைத்து விடுகின்றது, சர்க்கரைப் பொங்கலில் முந்திரி போல. இப்படி உங்கள் பழைய கட்டுரைகளில் பல இடங்களில் வெண்முரசுவின் பல பகுதிகளை அடையாளம் கொள்ள முடிகின்றது. இல்லை, எதிர்த் திசையிலா? 

ஒரு கூர்நுனிச் சிகரம் நோக்கிச் செல்லும் பயணத்தில், கீழிருந்து எடுத்துக் கொண்டு செல்கிறீர்களா? ஒரு பிரமிடு போல,  நீங்கள் இத்தனை ஆண்டுகள் எழுதி எழுதிக் கண்டு கொண்டதை எல்லாம் இங்கே வெண்முரசுவில் பந்தி விரிக்கிறீர்கள் என்று தோன்றுகின்றது. 

நன்றிகள்.

அன்புடன்,
இரா.வசந்த குமார்.