Sunday, November 19, 2017

தன்னந்தனி நின்றதுதான் அறிதல் (எழுதழல் -53)


    
    “துவாரகையின் அவையைப்பற்றி நீ இன்னும் அறிந்திருக்கவில்லை. பாரதவர்ஷத்தின் மாபெரும் அரசப்பேரவை அது. ஆறாயிரம் இருக்கைகள். வணிகர்கள், மாலுமிகள், அயல்தூதர்கள், குடித்தலைவர்கள், அந்தணர், முனிவர் என்று ஆறு பெரும்பிரிவுகள். ஒன்றிலும் இன்னமும் ஒருவர்கூட வந்தமரவில்லை” என்றார் சுதமர். அபிமன்யூ அதன்பின்னரே அதை முழுதுணர்ந்து “குடிகள் கூடவா?” என்றான். “எவருமே” என்றார் சுதமர். அத்தனை இருக்கைகளும் ஒழிந்துள்ளன. அந்தணரும் வணிகரும்கூட அவைபுகவில்லை.”
      

 ஆம்.  கிருஷ்ணர் தனிமை படுத்தப்பட்டிருப்பதாக தோன்றுகிறது.  எதிரிக்கு அஞ்சி நாடோடிகளாக திரிந்து, வாழ்ந்துகொண்டிருந்தவர்களுக்கு  ஒரு நாட்டை  உருவாக்கித் தந்து, ஒரு பெரு நகரை கட்டமைத்து,  சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்கான நெறிகளை ஏற்படுத்தி, வணிகம், தொழில்களைப் பெருக்கி, மற்ற நாடுகளின் அங்கீகாரத்தை பெறவைத்து எதிரிகள் மீண்டும் தொல்லை தராதவண்ணம் அவர்களை படையெடுத்து வென்று ஒரு நல்வாழ்வை உருவாக்கி தந்தவர் கிருஷ்ணர்.   இன்று அவரால் இவ்வாறு  பலன்பெற்ற அதே மக்கள் அவரை முற்றிலுமாக கைவிட்டு செல்கின்றனர்.    அந்த மக்களின்  உளநிலையை வெண்முரசு நுட்பமாக சொல்கிறது. 


துவாரகையின் முதன்மைக் குடித்தலைவர் அனைவரும் கிளம்பிச் சென்றனர். இரண்டாம் குடித்தலைவர்கள் அனைவரும் இங்கேயே இருந்தனர். அவர்கள் இங்கிருப்பது தயங்கியோ அஞ்சியோதான் என நினைத்தோம். இங்குள்ள எஞ்சிய யாதவர்களை ஒருங்கிணைப்பதற்காகவும் சென்றவர்களின் ஆணைகளை முறையாக கொண்டுசென்று சேர்ப்பதற்காகவும் என்று இப்போது தெரிகிறது” என்றார் ஸ்ரீதமர்.      
இளைய யாதவர் எவ்வகையிலும் யாதவக் குடிகளுக்கு தலைவரல்ல என்று அங்கே சொல் திரண்டிருக்கிறது. அதை அவருக்கு அறிவிக்கும் தருணமாக இதை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இங்குள்ள அத்தனை யாதவக் குடிகளும் அதற்கு கட்டுப்பட்டிருக்கிறார்கள்” என்று சொன்னார்.

       மிக உயர்ந்த நபரின் அருகில் இருப்பவர்களுக்கு  இயல்பாக ஏற்படும் உளவியல் சிக்கலாக இது இருக்கிறது. அவர்களுக்குள்  இருக்கும் ஆணவம் அந்த உயர்வை சகித்துக்கொள்வதில்லை. 


“அவர்களுக்குள் ஏதோ ஒன்று நிறைவு கொள்கிறது” என்றான் பிரலம்பன். “எது?” என்றான் அபிமன்யூ. “ஆணவம், கருவிலேயே உட்புகும் முதல் மலம்” என்றான் பிரலம்பன். “அதை எப்படி அறிந்தீர்?” என்றான் அபிமன்யூ. “நானும் மனிதனே என்பதனால்” என்று பிரலம்பன் சொன்னான்.

          யானை எப்போது இறந்து விழும் அதைத்  தின்னலாம் என காத்திருக்கும் சிறு நரிக்கூட்டம் போன்று அந்த உயர்ந்தவனின்  வீழ்ச்சிக்காக காத்திருக்கிறார்கள்.  எப்போது அவர் ஒரு சிறிய தவறையாவது செய்வார்,  அதைப் பெரிதாக்கி அவரை வீழ்த்தலாம் என காத்துக்கொண்டிருதவர்களாக் அவர்கள் இருக்கின்றனர்.    அதற்கு காரணமாக கொள்கை என்றும் மக்கள் நலம் என்று தன்னையும் மற்றவர்களையும் பல சொற்கள்கொண்டு விளக்கி ஏமாற்றுகிறார்கள்.  அதையெல்லாம தாண்டி அவர்களுல் உறைவது ஓநாயின் பசிபோல் இருக்கும் அவர்களின் அகங்காரம்.   தனது சுயநல அற்ப நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள  இரகசிய வேட்கைகொண்டு காத்திருக்கிறார்கள். அதற்கான சூழல் அமைகையில்  அவர்கள் தன் கோரைப்பற்களைக்காட்டி சீறி எழுகிறார்கள்.  அந்த உயர்ந்தவரை பழித்து விலகி ஓடுகிறார்கள் அல்லது கூட்டாகச் சேர்ந்து பாய்ந்து தாக்குகிறார்கள்.  

        கிருஷ்ணர் யாதவர்களை ஷத்திரியர்களுக்கு இணையாக உயர்த்துகிறார். தாம் யாருக்கும் தாழ்ந்தவர்கள் இல்லை என நாம் கூறினால்  தம்மை விட தாழ்ந்தவர் யாரும் இல்லை என்பதையும் கொள்ளவேண்டும் அல்லவா?   ஆனால் யாதவர்கள் அசுர குடிகளை தம்மைவிட கீழானவர்களாக கருதுகிறார்கள். அவர்களை இதுவரை ஒடுக்கிவைத்திருந்த அதே வேதநெறியை தம் கையில் எடுத்துக்கொண்டு  தமக்கு கீழ்படியில் இருக்கும் மற்றவர்களை ஒடுக்க நினைக்கிறார்கள்.  எதிரியின் சிறுமையை இடித்துரைத்து  அதற்காக அவர்களை தண்டிக்கவேண்டும்.  ஆனால் என் சிறுமைகளை நான் அப்படியே வைத்துக்கொள்வேன் எனக்கொள்கின்றனர்.  அதையும் மாற்றிக்கொள்ளச் சொன்னால் அப்போது அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாமல்  குல மேன்மை,  நெறி, மரபு, பாரம்பரியம், போன்றவற்றை பேசுகிறார்கள். இதே காரணங்களைக் காட்டித்தான் அவர்கள் இதற்கு முன் ஒடுக்கி வைக்கப்பட்டிருந்தனர் என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ள மறுக்கிறார்கள். அன்றிலிருந்து இன்றுவரை மக்களின் இந்த கீழான குணம் மாறவேயில்லை என்பதை நாம் கண்டுவருகிறோம்.  இதற்கு வாகான ஏதாவது ஒரு காரணமாக, இனம், மதம், குலம், சாதி, பதவி, செல்வம்  என எதையாவது கையில் எடுத்துக்கொள்கிறார்கள். தன்னைவிட பிறரை தாழ்த்திக்கருதும் சிறுமையை மக்கள் தம் மனங்களில் நிறைத்திருக்கிறார்கள்.     தம் சிறுமையான நோக்கங்களை மனதில்கொண்டு அவருடைய உயரிய நோக்கங்களை பழிக்கிறார்கள்.  அவரை தனிமை என்ற  சிலுவையில் அறைய முயல்கின்றனர்.  அவரை கொன்றொழிக்கவும் தயங்குவதில்லை


    ஒரு உயரிய மனிதர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்காகவென இருக்கமுடியாது. அவரால் அனைத்து உயிர்க்குலத்தையும்  சமமானவராகவே கருதமுடியும்.  ஒட்டுமொத்த மக்களின் நன்மையை கருத்தில் கொண்டே அவர் செயல்படமுடியும்.   கிருஷ்ணர்  அப்படி ஒரு சமத்துவ சமூகத்தை எதிர் நோக்கியே தன் செயல்பாடுகளை மேற்கொள்கிறார். இது அவரின் யாதவ குடிகளுக்கு ஒவ்வாமல் போகிறது. அவருடைய பிள்ளைகளே எதிர்க்கிறார்கள்,  அவரின் தமையனே எதிர்க்கிறார் என்பதை எடுத்துக்காட்டாகக் காட்டி அவர்கள் அவர் தங்களுக்காக செய்த நன்மைகளையெலாம் கருதாமல் புறந்தள்ளி அவரை மறுதளித்து விலகிச் செல்கின்றனர்.


      இவையெல்லாம் அரசியல் காரணங்கள்.  அதற்கப்புறமும் தாண்டி கிருஷ்ணரின் தனிமைக்கு வேறு காரணங்கள் இருக்கின்றன. கிருஷ்ணர் தன்னை பரம்பொருளாக அறிந்திருப்பவர். 
 “அங்கு அவரிடம் சொல்லாடிக் கொண்டிருக்கையில் அதை என்னால் உணரமுடியவில்லை. அறைவிட்டு வெளியே வந்ததுமே உள்ளே நான் கண்டதென்ன என்று என் உள்ளம் திடுக்கிட்டது. எட்டு மங்கலங்களுடன் கூடிய இறையுரு. பிறிதொன்றும் அல்ல.”
அவரே பிரம்மமென ஆகி நிற்பவர். 

  பிரம்மம் என்பது அனைத்தையும் தாண்டி உயர்ந்த சிகரத்தின் உச்சி. ஆகவே அது ஒன்றேயென ஆனது.
  பிரம்மம் என்பது முடிவிலி. அதன் அருகமைந்தவை என என எவையுமன்றி அமைந்திருப்பது.
  பிரம்மம் என்பது பிரபஞ்சம் அதிலிருந்து வேறுபட்டு என எதுவும் இருப்பதில்லை என்பதால் அது ஒற்றை இருப்பு.
  பிரம்மம் என்பது ஞானம்.  வேறெந்த அறிவும் அதனருகில் அஞ்ஞானாமென ஆவதால் அது தனித்துவமானது.
  பிரம்மம் என்பது பேரியற்கை. அதற்கன்னியமானது என எதுவும்  இல்லாததால் அது கொண்டிருப்பது தன்னந்தனிமை.

   மனிதன் தன் திறனென்று தன் நோக்கமென்று  தன் அறிவென்று  கொள்வதெல்லாம்  அப்பிரம்மத்தை அடைவதற்கு  தடையாக இருக்கின்றன.   தன் திறனெல்லாம்  தனதில்லை  எனதறியாமல், தனக்கான நோக்கமென தனித்தெதுவும் இல்லை என ஆகாமல், அறிவென இருப்பதெல்லாம் அறிவல்ல என உணர்ந்து அவையெல்லாம தன்னிடமிருந்து அறாமல்,  அந்தப்  பிரம்மத்தை அறிய, அதாகவே ஆகி நிற்க இயலாது. பிரம்மமென அவர்கொண்ட தனிமையையே அவர் இப்படிக் கூறுகிறார்.

 
“நான் எப்போதும் முற்றிலும் தனிமையில்தான் இருக்கிறேன், மைந்தா” என்று இளைய யாதவர் சொன்னார்.
  இதை எப்படி ஒருவரால் முழுதாக விளக்கமுடியும் என்று தோன்றவில்லை. கந்தர் அனுபூதியில் 'தன்னந்தனி நின்றதுதான் அறிய இன்னம் ஒருவருக்கிசைவிப்பதுவோ?' எனச் சொல்லப்பட்டிருப்பது இதைத்தான் அல்லவா?

     அதே நேரத்தில் அவனுடைய அவையை  நிறைப்பவர்களின் கூட்டம் ஒன்று எப்போதும் இருக்கிறது.
இன்றல்ல, என்றும் அவருடைய அவை அவருக்குரியவர்களால் நிறைந்திருக்கும், பிரலம்பரே. இப்புவி உள்ளவரை அவரது அவை ஒழியாது” என்றான் அபிமன்யூ.



அவனுக்கு என்றென்றைக்கும்  உரியவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அவன்பால்  காதல் கொண்டவர்கள். அவனன்றி வேறு நோக்கமற்றவர்கள்.  அறிவொன்றொற நின்று அவனை அறிந்தவர்கள். அவன் அருகாமையில் எப்போதும் இருக்கும் திறனை நாடுபவர்கள். 


“நான் பிறிதொன்று எண்ணினேன், என் முழுதுளமும் என்ற சொல் என்னுள் எழுந்து அலையடிக்கிறது. இளவரசே, அவருக்கு அளிப்பதற்கு சில நம்மிடம் உள்ளதென்பதே எவ்வளவு பெரும்பேறு! கொள்க என அவர் காலடியில் படைப்பதற்கு நம் மூதாதையர் நமக்கு அளித்தது இந்தப் புன்தலை, நாம் அவருக்கெனத் திரட்டிய இவ்வுள்ளம்” என்றான் பிரலம்பன்.


.  இத்தகையவர்களாலல்லாமல் அந்த அவையில் வேறு யார் அமர்ந்தாலும் அது பொருத்தமற்று போகும் அல்லவா?

மீண்டும் ஒழிந்துகிடந்த பேரவையை நோக்கியபோது அதில் வெறுமை தெரியவில்லை. அங்கே மானுடரென எவர் அமரமுடியுமென்றே தோன்றியது. நாளை ஓர் அவையில் அங்கே மானுடர் அமர்ந்திருப்பார்களென்றால் உளம் சீற்றம் கொள்ளும் என எண்ணினான்.  


   கிருஷ்ணனின் பேரவை விரிந்து விரிந்து சென்றுகொண்டிருக்கிறது.   துவாரகை தன் எல்லைகளை வளர்த்துக்கொண்டே போகிறது. ஆனால் அது மண்ணில் நிகழவில்லை. பக்தர்களின் மனங்களில் விரிகிறது. 


தண்டபாணி துரைவேல்