Sunday, November 5, 2017

பிரயாகை சுரேஷ் பிரதீப்


நிலைபெயராமை ஒன்றையே நோக்கமெனக் கொண்டு தவமியற்றும் உத்தானபாதனின் மைந்தன் துருவனின் கதையோடு தொடங்குகிறது பிரயாகை. முற்றாக தோற்கடிக்கப்படுதல் முற்றாக கைவிடப்படுதல் முற்றாக வஞ்சிக்கப்படுதல் எனும் நிலைகளில் இருந்து மீண்டு வருபவர்களில் கூடும் சமநிலையின் சித்திரத்தை அளிக்கிறது. நிலைபெயராத துருவனும் நிலை கொள்ளாத ஆகாய கங்கையும் என சுழற்சியின் இரு பெரும் விசைகளை அறிமுகம் செய்கிறது. கங்கையை மண்ணுக்கு இழுக்கும் பகீரதனின் கதையை சொல்கிறது.
படைக்கல பயிற்சிகள் முடிந்ததும் தன் மாணவர்களிடம் பாஞ்சால மன்னன் துருபதனை வென்று தேர்த்தட்டில் கட்டி இழுத்து வருமாறு ஆணையிடுகிறார் துரோணர். போருக்கான முன்னெடுப்புகள் நிகழ்ந்த பிறகு தருமனின் மனம் கொள்ளும் இரக்க உணர்வுகளை அர்ஜுனனும் பீமனும் கையாளும் விதம் எளிமையான நீதியுணர்ச்சியிலிருந்து விடுபட வைக்கிறது. களத்தையும் வியூகங்களையும் வாய்ப்புகளையும் விரிவாக விளக்குகிறது. கௌரவர்கள் கர்ணன் தலைமையில் துருபதனை எதிர்கொள்கின்றனர். நிலைமை எல்லை மீறும் போது அர்ஜுனன் தலைமையில் பாண்டவர்களின் படை களமிறங்குகிறது. அத்தனை கள நியதிகளையும் மீறி துருபதனை தேர்த்தட்டில் கட்டி இழுத்துச் செல்கிறான் அர்ஜுனன். மனம் பதைத்து அவனைத் தடுக்கும் தருமனிடம் பீமன் சொல்லும் நியாயங்கள் இரக்கமற்றவை எனினும் உண்மையே. துருபதனை துரோணர் எதிர்கொள்வதை அர்ஜுனன் காணும் கணங்கள் நுட்பமானவை. நம்பிக்கை இழப்பிற்கு ஆளாகி வதைபடுகிறான். பீமனும் அர்ஜுனனும் மாறுபடுவதன் வழியாகவே தருமனை அறிய முடிகிறது. மூவருக்குமான தொடர்ச்சியான விவாதங்கள் மூலம் அவர்கள் நுண்மையாக வேறுபடும் இடங்களையும் அவர்களை இணைத்திருக்கும் மையத்தையும் அறிய முடிகிறது. அர்ஜுனனின் நிலையழிவை பீமன் எதிர் கொள்ளும் விதமும் மீண்டும் துருவனையும் கங்கையையும் நினைவுறுத்துகிறது. சிக்கலான அரசு சூழ்தல்களில் தருமனுக்கும் குந்திக்கும் இடையே அர்ஜுனன் அலைகழிகிறான். தருமனுக்கு இளவரசுப்பட்டம் சூட்டப்படுவதும் அது அர்ஜுனனின் பார்வையில் விரிவதும் அதற்கு முந்தைய அவன் மனநிலையும் நுண்மையாகப் பொருந்துகின்றன.
அவமதிக்கப்பட்ட துருபதனின் மனம் அந்த அவமதிப்பை சந்திப்பது அவர் தோழர் பத்ரரின் பார்வையில் நுணுக்கமாக வெளிப்படுகிறது. தன்னிடமிருந்து தன்னை மறைக்க அகம் கொள்ளும் பாவனைகளும் நடிக்கும் நாடகங்களும் விலக துருபதன் தனித்து நின்று எரிகிறார். மனதில் ஊறிய வஞ்சத்தை களைய முடியாதவராய் அதர்வ வைதிகர்களான யாஜ உபயாஜர்களை கொண்டு நிகழ்த்தும் வேள்வியின் வழியாக தன்னை மீட்டுக் கொண்டு திரௌபதியை பெறுகிறார். நிமிர்வும் கருணையும் கொண்ட பேரழகியாக மண்ணடைகிறாள் பாஞ்சாலி.
இருபதாண்டுகளுக்கும் மேலான காத்திருப்பு பொருளற்றுப் போகவே மீண்டும் காந்தாரம் நோக்கி கிளம்புகிறார் சகுனி. பசித்த கிழ ஓநாயுடனான சகுனியின் விவாதங்கள் பாலைவனத்தின் இரக்கமற்ற கூர்மையைக் கொண்டுள்ளன. ஓநாயால் கடிபட்டு சகுனி மீண்டு வருவதை அவர் அமைச்சர் கிருதர் காண்கிறார். மனதின் பாவனைகள் உடலில் வெளிப்படுவதை சகுனியின் வழியாக காண்கிறார் அவர் தளபதி கிருதர். மருத்துவரான ஊஷரர் சொல்லும் கதையை சகுனியின் ஆழம் நம்பி விடுகிறது. அத்தருணத்தில் கணிகரை சகுனி சந்திக்கிறார். அவருடன் அஸ்தினபுரி மீள்கிறார்.
இளவரசுப்பட்டம் கட்டப்பட்ட பாண்டவர்கள் ஏழாண்டுகள் பயிற்சி முடிந்து சௌவீர மணிமுடியை வென்று திரும்புகின்றனர். திருதராஷ்டிரரை விடுத்து அவர்கள் குந்தியை சந்திக்கும் இடத்தில் முதல் பிறழ்வு நிகழ்கிறது. இளையவர்களான நகுலனும் சகதேவனுமே குந்தியை நோக்கி முதலில் ஓடுகின்றனர். தருமன் தயக்கமின்றி அவர்களைத் தொடர்கிறான். பீமன் திருதராஷ்டிரரை திரும்பி நோக்கியபின் செல்கிறான். அர்ஜுனன் திகைத்து நின்று விடுகிறான். அங்கு நிகழும் உடைவே இயல்பாகவே பெருகிறது. மதுராவை மகதத்திடமிருந்து காக்க உதவி கேட்டு பலராமரின் தூதுடன் துரியோதனன் வருகிறான். எதிரியல்புகளால் தருமனால் அவமதிக்கப்படுகிறான். அர்ஜுனன் மனதில் அக்கணம் தருமனும் இறக்கிறான். கிருஷ்ணனை அர்ஜுனன் சந்திக்கும் இடம் அது. அரசியல் காரணங்களால் துரியோதனனுக்கு படைப்புறப்பாடு மறுக்கப்பட்ட பின் குந்தியிடமிருந்து தனக்கான படையை கிருஷ்ணன் பெறுவதும் விதுரரை விலக்கி நகர்வதும் அவனை நிறுவி விடுகின்றன. அப்படை புறப்பாடும் வெட்டுக் கிளிகள் போல தாக்குவதும் தோழனாகவும் தளபதியாகவும் சிறுவனாகவும் கிருஷ்ணன் அமைவது அர்ஜுனனை உவகை கொள்ளச் செய்கின்றன. தன் ஆசிரியனை கண்டு கொள்கிறான். துரியோதனனின் வஞ்சத்தை கணிகரும் சகுனியும் பெறுக்குகின்றனர். அவரை எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறார் விதுரர். கௌரவ நூற்றுவர்களும் ஒருங்கிணைக்கப்பட்டு பாண்டவர்களையும் குந்தியையும் வாரணவதத்தில் எரித்தழிக்க முடிவு செய்கின்றனர் சகுனியும் கணிகரும். விதுரரின் சொற்கள் வழியாக எரிநிகழ்வை உணர்ந்து அங்கிருந்து தப்புகின்றனர் பாண்டவர்கள்.
திரௌபதி இளவயதிலேயே திடமான முடிவுகள் எடுப்பவளாக வளர்கிறாள். அவள் அன்னை பிருஷதியின் விழிகள் வழியாக திரௌபதியின் பேருருவம் வெளிப்படுகிறது. பிருஷதிக்கு விறலி சம்வரணனுக்கும் சூரியனின் மகளான தபதிக்கும் குரு வம்சத்தின் முதலவனான குருவின் பிறப்பு சொல்லப்படுவதன் மூலம் கர்ணனை அறிமுகம் செய்து கொள்கிறாள் திரௌபதி. எரி நிகழ்வில் உயிர் பிழைத்ததும் அரசியாகவே வாழ்ந்த குந்தி அன்னையாகிறாள். அவள் வினதை கத்ரு என இரு சகோதரிகளின் கதையை சொல்வது அவளும் காந்தாரியுமாகவே மனதில் நிற்கிறது. காட்டிற்குள் பாண்டவர்கள் அனைவருமே விடுதலை கொள்கிறார்கள். இடும்பியை பீமன் மணம் கொள்கிறான். குரங்குகள் சூழ நடக்கும் அந்த மணத்தில் சூர்ணன் என்ற குட்டி குரங்கு தருமனை கேலி செய்யும் விதம் புன்னகைக்க வைக்கிறது. குந்திக்கும் தருமனுக்கும் அந்நேரம் நடைபெறும் உரையாடல் கூர்மையானது. கானகத்தினரான இடும்பர்கள் பாண்டவர்களை ஏற்க மறுப்பதற்கான நியாயங்கள் முகத்தில் அறைகின்றன.
கடோத்கஜனின் பிறப்பும் பீமன் அவன் வழியாக தன் நெஞ்சில் ஊறிய கசப்பினை போக்க முயல்வதும் சிலிர்க்கச் செய்கின்றன. வாரணவத எரிநிகழ்வு முடிந்து ஏழு வருடங்கள் கடந்து திரௌபதியின் சுயம்வரத்தில் கலந்து கொள்ள சாலிஹோத்ர குருகுலத்தில் இருந்து பாண்டவர்கள் புறப்படுகின்றனர். விதுரரின் வழியாக பாண்டவர்கள் உயிருடன் இருப்பதை பீஷ்மர் அறிகிறார். குடிகளின் வழியாகவே சகுனியும் கணிகரும் துரியோதனனுக்கு இளவரசுப்பட்டம் சூட்ட வேண்டிய அவசியத்தை உருவாக்குகின்றனர்.
பகனை பீமன் வீழ்த்திய கதை சொல்லும் சூதனுடன் பலராமர் அவை நுழைகிறார். பாண்டவர்கள் உயிருடன் இருப்பதை அறிந்து பட்டம் கட்டுதல் தடைபடுகிறது. அனைத்து சம்பவங்களும் ஒன்றிணைந்து திரௌபதியின் சுயம்வரம் எனும் உச்சம் நோக்கி நகர்வது கதையோட்டத்தில் ஒரு ஒருமையை உருவாக்குகிறது. அணுக்கத்தோழி மாயையின் வழியாக இம்முறை திரௌபதி வெளிப்படுகிறாள். லட்சுமி சாவித்ரி சரஸ்வதி துர்கை ராதை என ஐந்து அன்னையரால் ஆளப்படும் பாஞ்சாலத்தின் ஒவ்வொரு அன்னையின் ஆலயத்திலும் திரௌபதி கர்ணனையும் அர்ஜுனனையும் தருமனையும் பீமனையும் இறுதியாக கிருஷ்ணனையும் காண்கிறாள். ஒவ்வொருவரை காணும் போதும் மாயையுக்கும் திரௌபதிக்கும் இடையே நிகழும் அகப்பரிமாற்றங்கள் மட்டுமே தனியொரு நூலாக எழுதத்தக்கவை. திரௌபதியின் மீதான கர்ணனின் காதலை துரியோதனன் உணர்கிறான். பரசுராமரிடம் வில்வேதம் கற்று மீளும் கர்ணன் தன் அனுபவங்களை துரியோதனனிடம் சொல்வது வலி ஏற்படுத்தும் தருணம். ஐந்து கிளிகளை பொறி வில்லால் வீழ்த்தும் போட்டி சுயம்வரத்தில் அமைக்கப்படுகிறது. சொற்கள் இருக்கை நுனிக்கு இழுத்து வர முடியும் என்ற உண்மையை அப்போட்டி மீண்டும் உணர்த்துகிறது. பிராமணர் வரிசையில் அமர்கின்றனர் பாண்டவர்கள். திரௌபதியின் உள்ளம் போலவே ஒவ்வொருவரையும் தூக்கி எறிகிறது அவ்வில். கர்ணனின் இறுதி அம்பு இலக்கை தவற விடும் இடத்தை மனம் ஒப்பவே மறுக்கிறது. கிருஷ்ணன் நான்கு இலக்குகளை வீழ்த்திய பின் மீண்டு வந்து அமர்கிறான். அர்ஜுனன் போட்டியில் வென்று மீண்டும் வெறுமையையே உணர்கிறான்.
துருபதன் மகளை ஐவருக்கும் மணமுடித்து கொடுக்கும் காரணங்கள் நேரடியாக சொல்லப்படவில்லை எனினும் அதன் அரசியல் உட்பொருள் சொல்லப்படுகிறது. திரௌபதி துருவனைக் கண்டு புன்னகைப்பதோடு முடிவடைகிறது பிரயாகை.
மிக நுட்பமான பல தருணங்கள் நிறைந்த நாவல் பிரயாகை. விதுரரை கிருஷ்ணன் மிரட்டி விலக்கிய பின் அவர் அகத்தில் நடக்கும் மோதல்களும் பாண்டவர்களைக் கொல்ல முடிவெடுத்தபின் கௌரவர்களில் ஒருவனான குண்டாசி அடையும் மனப்பிறழ்வும் மிக முக்கிய திருப்பங்களை விளைவிக்கின்றன. நன்மையை ஏற்று நடிக்கும் பாவனையற்றவனாக நன்மைக்கும் தீமைக்கும் நடுவிலேயே நிற்கிறான் கிருஷ்ணன். அவன் மதுராவை மீட்பதும் துவாரகையை அமைப்பதும் பிறர் சொற்களின் வழியே வெளிப்படுகிறது. அறிய முடியாத பேரிருப்பாகவே கிருஷ்ணன் வெளிப்படுகிறான். அவனுடைய நியாயங்களும் இலட்சியங்களும் திகைத்து நிற்க வைக்கின்றன. கானக மக்கள் வெற்றி கொள்ளப்படுவதன் சித்திரமும் பிரயாகையில் வெளிப்படுகிறது. மகாபாரத்தின் மையப்பாத்திரங்களை பிரயாகை விரித்தெடுத்திருப்பதை வாசித்து முடித்த பின்னரே உணர முடிகிறது. கால அளவிலும் பிரயாகை நெடுந்தூரப் பயணமே.